Thursday, March 15, 2012

மூளை இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்….


brain_poolதினமும் ஏதேதோ பணிகள் செய்கிறோம், இவற்றில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பலசெயல்கள் நமது மூளையைப் பாதிக்கின்றன.
1. காலையில் அலறி அடித்துக் கொண்டு எழுந்து, குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பி, குளித்துவிட்டு அலுவலகத்துக்கு ஓடவேண்டும். இதுக்கு இடையில் காலை உணவெல்லாம் சாப்பிடுவதே இல்லை. அதுக்கெல்லாம் நேரமில்லை என சொல்லும் ஆசாமியா நீங்க ? கவனம் தேவை. காலை உணவைத் தவிர்த்தால் உடலில் சருக்கரை அளவு குறைந்து விடுகிறது. இதன் மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் போய்விடுகிறது. இதன் மூலம் மூளை சோர்வடைகிறது.
2. சிலர் இதற்கு நேர் எதிர். எப்போ உட்கார்ந்தாலும் கிலோ கணக்கில் உள்ளே தள்ளினால் தான் திருப்தி ! அவர்களுக்கும் சிக்கல் இருக்கிறது. அதிகம் உண்டால் மூளை தனது உற்சாக திறனை கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கும். அதிலும் சிப்ஸ், பீட்சா, கோக் போன்ற குப்பை உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் மூளையும் காயலான் கடைக்குப் போடும் நிலைக்கு வந்து விடும். உனவில் மீனை தொடர்ந்து உட்கொள்வது மூளையின் நினைவாற்றலை வயதான காலத்திலும் கூர்மையாக வைத்திருக்கும் என்பது மீன் பிரியர்களுக்கான துள்ளல் செய்தி !
3. புகை பிடித்தல் ! மூளையின் முக்கியமான எதிரி. மூளையை இது சுருங்க வைக்கும், நினைவிழக்க வைக்கும், பிற்காலத்தில் அல்சீமர் போன்ற நினைவிழத்தல் நோய்களுக்கெல்லாம் காரணமாகிவிடும். கோகைன் போன்ற பொருட்களும் மூளைக்கு எதிரி. அது மூளையின் ஒரு குறிப்பிட்ட அணுக்களை சுனாமி போல வாரி அழித்துச் சென்று விடும்.
4. மொடாக்குடியர்களுக்கு மூளை செல்லாக்காசாகி விடும். கொஞ்சமாய் குடிப்பது மூளைக்குப் பாதிப்பில்லை (வேறு பல பாதிப்புகள் உண்டு என்பது கண்கூடு) என்றாலும் அதிக அளவு மது மூளையின் அணுக்களைக் கொலை செய்து விடுகிறது. எதுக்கு வம்பு, போதையை விட்டு விலகியே இருக்கலாமே !
5. சரியான அளவு தண்ணீர் குடிக்காததும் மூளையைப் பாதித்து விடுகிறது. உடலில் தேவையான அளவு தண்ணீர் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் குறைந்த இடைவெளியில் அதிக தண்ணீரைக் குடிப்பதை விலக்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாய் அடிக்கடி குடிப்பதே மிகச் சிறந்தது, தேவையானது !
6. அடிக்கடி தலையை வேகமாய் ஆட்டுவது கூட மூளைக்குக் கெடுதலாம். உங்கள் தலை உங்களிடம் தானே இருக்கிறது, தேவையில்லாமல் ஆட்டாதீர்கள்.
7. அதிக இனிப்பை உட்கொள்வதும் மூளைக்கு நல்லதல்ல. புரோட்டீன்களையும், சத்துகளையும் கிரகித்துக் கொள்ளும் உடலின் தன்மையை அது குறைக்கிறது. இதன் மூலம் மூளையின் வளர்ச்சியும் தடைபடுகிறது.
8. உடலில் பிராணவாயுவை அதிகம் எடுத்துக் கொள்ளும் ஒரு பகுதி மூளை. இதனால் தான் மூச்சுப் பயிற்சிகள் மூளை வளர்ச்சிக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன. சுகாதாரமற்ற காற்று உள்ள இடங்களில் தங்க நேர்ந்தால் அந்த காற்றின் மாசு, மூளையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
9. நிம்மதியான தூக்கம் மூளையின் நெருங்கிய நண்பன். மூளையை புத்துணர்ச்சியுடனும் கெட்ட செல்கள் இல்லாமலும் பாதுகாப்பது நிம்மதியான தூக்கமே.
10. மன அழுத்தம் மூளையைப் பாதிக்கும் முக்கியமான ஒரு வில்லன். கொஞ்சம் அழுத்தம் நம்மை இலட்சியத்தை நோக்கி ஓடச்செய்யும், ஆனால் அதிகப்படியான அழுத்தம் மூளையின் அணுக்களைக் கொன்று விடும்.
11. தலையை மூடிக் கொண்டு தூங்குவது மூளையைப் பாதிக்கும். காரணம் மிக எளிது ! மூளைக்கு அதிக ஆக்சிஜன் தேவை. தலையை மூடிக் கொண்டே தூங்கினால், கரியமில வாயுவைத் தான் அதிகம் சுவாசிக்க வேண்டி வரும். அதனால் தான் காரணம். நல்ல காற்றோட்டமான, வெளிச்சமான, பச்சைப் பசேலென்ற உற்சாகச் சூழல்கள் மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.
12. உடல் நிலை சரியில்லாதபோதோ, சோர்வாய் இருக்கும் போதோ மூளைக்கு அதிக வேலை கொடுப்பதும் மூளையை வலுவிழக்கச் செய்யும். எனவே மூளைக்கு ஓய்வு தேவைப்படும் போது ஓய்வு கொடுப்பதே மிகவும் தேவையானதாகும்.
13. நல்ல சிந்தனைப் பயிற்சிகளைக் கொடுப்பது மூளைக்கு நல்லது. நேர் சிந்தனைகள், உற்சாகமான சிந்தனைகள் போன்றவை மூளையை உற்சாகமூட்டும். அதே நேரத்தில் எதிர்மறை சிந்தனைகளை அசை போட்டுக் கொண்டிருந்தீர்களெனில் உங்கள் மூளையின் அணுக்கள் செத்துக் கொண்டிருக்கும்.
மூளையைப் பாதுகாப்பது வாழ்க்கையைப் பாதுகாப்பது போல. கவனமுடன் கையாள்வோம் வாழ்க்கையையும், மூளையையும்.

No comments:

Post a Comment