Wednesday, March 07, 2012

உலகை மிரட்டும் இந்தியாவின் புதிய பாக்டீரியா!

பாக்டீரியாவை விட்டு பாக்டீரியாவுக்குத் தாவி புதிய வகையான பாக்டீரியாவை உருவாக்கும் 'ஜீன்' இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, மற்றும் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பரவி வருகிறது.

இந்த 'ஜீன்' இந்தியாவிலிருந்து பரவியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

New Delhi metallo-beta-lactamase-1 அல்லது NDM-1 என்று அழைக்கப்படும் இந்த 'ஜீன்' மூலமாக சுரக்கும் 'என்ஸைம்கள்' புதிய வகையான பாக்டீரியாக்களை உருவாக்கி வருகிறது. வழக்கமான பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகளால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

குறைந்த செலவு என்பதால் இந்தியாவுக்குச் சென்று மருத்துவ சிகிச்சைகள் பெற்றுத் திரும்பியவர்கள் மூலம் இந்த ஜீன் பரவியுள்ளதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் இந்த பாக்டீரியாவால் தாக்கப்பட்ட 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக பாக்டீரியாக்கள் எதற்கு அடங்காவிட்டாலும் மிக சக்தி வாய்ந்த மருந்தான carbapenems ரக 'ஆண்டிபயாடிக்' மருந்துகளுக்கு கட்டுப்பட்டுவிடும். ஆனால், இந்த புதிய ஜீன் கொண்ட பாக்டீரியாக்களை இந்த மருந்து கூட அழிக்க முடியவில்லை என்பது தான் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.

இதன்மூலம் இந்த பாக்டீரியாவை அழிக்க மருந்தே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் இந்த பாக்டீரியா விரைவிலேயே உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து தான் இந்த பாக்டீரியா பரவியுள்ளதாகக் கூறப்பட்டு அதற்கு டெல்லியின் பெயரும் வைக்கப்பட்டுவிட்டதால் நாட்டின் 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. இங்கு மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவு மிகக் குறைவு என்பதால் பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பாக்டீரியா முடக்கப்பட்டு, பயம் போகும் வரை இந்தப் பயணிகளின் எண்ணிக்கை பெரும்ளவு சரியும் என்று தெரிகிறது.

சென்னை மற்றும் ஹரியாணாவில் சிகிச்சை பெற்று பிரிட்டனுக்குத் திரும்பியவர்களிடமிருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகளை சோதித்தபோது அதில் பலருக்கும் NDM-1 பாக்டீரியா தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளதாக ஒரு பிரிட்டன் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

1940களில் பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது அனைத்து பாக்டீரியாக்களையும் அழித்துக் காட்டியது. ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல பென்சிலினை தாக்குப் பிடிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகிவிட்டன.
  
இதையடுத்து அடுத்தடுத்து அதிக சக்தி வாய்ந்த ஆண்டிபயாடிக் மருந்துகளை விஞ்ஞானிகள் உருவாக்கிக் கொண்டே உள்ளனர். ஆனால், அவை கட்டுப்பாடே இல்லாமல் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டதால் தான் இப்போது அதையெல்லாம் கூட எதிர்த்து நிற்கும் புதிய பாக்டீரியா உருவாகக் காரணமாகிவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இப்போது இந்த நவீன பாக்டீரியாக்களை colistin என்ற மருந்தைக் கொண்டு அடக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன. ஆனால், இந்த மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகள் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த மருந்தை மிக மிக நோயுற்றவர்களுக்கே பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

No comments:

Post a Comment